தமிழகத்தில் 146 லட்சம் ஏக்கராக இருந்த சாகுபடி பரப்பு 151 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளதாக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய அவர், இந்திய அளவில் கேழ்வரகு உற்பத்தியில் தமிழகம் முதலிடம் வகிப்பதாகக் குறிப்பிட்டார்.
மக்காச்சோளம், எண்ணெய் வித்துக்கள், கரும்பு உற்பத்தியில் இரண்டாம் இடமும்,
நிலக்கடலை, குறு தானியங்கள் உற்பத்தியில் மூன்றாம் இடத்திலும் தமிழகம் திகழ்வதாக அவர் கூறினார். இயற்கை பேரிடர்களில் இருந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் முயற்சியாக கடந்த 4 ஆண்டுகளில் ஆயிரத்து 631 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
நுண்நீர் தொழில்நுட்பம் மூலம் தண்ணீர் சேமிப்பு கட்டுமானங்களை அமைத்து டெல்டா மாவட்டங்களில் நிலத்தடி நீர் செறிவூட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். வேளாண் பட்டதாரிகளை வழிநடத்த உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும் என்றும், அதற்கு 3 முதல் 6 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும் எனவும் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் அறிவித்தார்.