நிலத்தகராறு காரணமாகத் தாம்பரத்தில் இருந்து காரில் கடத்தப்பட்ட முதியவர் செஞ்சி அருகே கொலை செய்து புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அயனாவரம் பகுதியைச் சேர்ந்த முதியவரான குமார் என்பவருக்கும் ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த ரவி என்பவருக்கும் இடையே நிலத் தகராறு இருந்துள்ளது.
மேலும் நிலத்தைப் போலி பத்திரங்கள் மூலம் ரவி அபகரிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து காவல் நிலையத்தில் குமார் புகார் அளித்ததைத் தொடர்ந்து, ரவியின் ஆவணங்கள் போலியானவை என விசாரணையில் தெரிய வந்தது.
இதனால் ஆத்திரமடைந்த ரவி தரப்பினர் நிலம் சம்பந்தமாகச் சந்திக்க வேண்டும் என குமாரைத் தாம்பரம் வரவழைத்து காரில் கடத்திச் சென்றனர். செஞ்சி அருகே சென்றதும் குமாரைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு சடலத்தை வனப் பகுதியில் புதைத்துள்ளனர்.
குமாரைக் காணவில்லை என அவரது உறவினர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் ரவியைக் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய இருவரைத் தேடி வருகின்றனர்.