கடந்த 2023-ம் ஆண்டு கடலில் எண்ணெய் படலம் பரவிய விவகாரத்தில் இழப்பீடு வழங்கக்கூறி சென்னை பெட்ரோலிய கழகத்துக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவுக்கு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.
சென்னையில் கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த அதிகனமழையின்போது மணலி பகுதியில் உள்ள சென்னை பெட்ரோலிய கழக நிறுவனம் அருகில், பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக கடலில் எண்ணெய் படலம் பரவியது.
இதனால் அப்பகுதியில் மீன்கள் செத்து மிதந்ததுடன், மக்களின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதனால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு 73 கோடியே 68 லட்சம் ரூபாய் இழப்பீடாக செலுத்தும்படி சென்னை பெட்ரோலிய கழகத்துக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை பெட்ரோலிய கழகம் தாக்கல் செய்த வழக்கு, தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, எண்ணெய் கசிவு குறித்து ஐ.ஐ.டி இன்னும் அறிக்கை தாக்கல் செய்யாத நிலையில் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது நியாயமற்றது என சென்னை பெட்ரோலிய கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இழப்பீடாக 19 கோடி ரூபாயை வங்கி உத்தர வாதமாக 4 வாரங்களில் செலுத்த சென்னை பெட்ரோலிய கழகத்துக்கு ஆணையிட்ட தீர்ப்பாயம், மாசு கட்டுப்பாட்டு வாரிய உத்தரவுக்கு தடை விதித்தது.