திருப்புவனம் அருகே குறி சொல்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தானம். இவர் குறி சொல்லும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் அவருக்கும் வீட்டின் அருகே வசிக்கும் தினேஷ் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பானதாக கூறப்படுகிறது.
இதையடுத்து தினேஷ் தனது நண்பர் அஜித்குமார் என்பவரை வரவழைத்து சந்தானத்தை அரிவாளால் வெட்டியதாக தெரிகிறது. ரத்த வெள்ளத்தில் கிடந்த சந்தானத்தை உறவினர்கள் மீட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி சந்தானம் உயிரிழந்தார். தொடர்ந்து அரிவாளால் வெட்டிய தினேஷ், அஜித்குமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.