அரசு மற்றும் தனியார்ப் பள்ளி மாணவர்களுக்குச் சமமான கல்வி வழங்க வேண்டும் என்பதே மும்மொழிக் கொள்கையின் நோக்கம் என, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திருச்சி மன்னார்புரம் பகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் தேசிய கல்விக் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் பாஜக மூத்த தலைவர்கள் ஹெச்.ராஜா, தமிழிசை சௌந்தரராஜன், பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் பங்கேற்றனர்.
விழா மேடையில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜகவின் கையெழுத்து இயக்கத்திற்கு மக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
18 நாள்களில் 26 லட்சம் பேர் தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்துக் கையெழுத்திட்டுள்ளதாகப் பெருமிதம் தெரிவித்த அண்ணாமலை, 8-வது மண்டல மாநாடு முடிவடையும் போது 2 கோடியை நோக்கி கையெழுத்து இயக்கம் செல்லும் என உறுதிப்படக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தரமான கல்வி கிடைக்க புதிய கல்விக் கொள்கை வழிவகுக்கும் எனத் தெரிவித்தார்.