திருச்செந்தூர் கோயில் கழிப்பறை குறித்து வீடியோ வெளியிட்ட பாஜக தொண்டர் மிரட்டல் காவல்துறையால் மிரட்டப்பதற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், திருச்செந்தூர் திருக்கோவிலில் பல நூறு கோடி செலவில் ஆலய மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்றதாகத் திமுக அரசு கூறியதாகவும், ஆனால், அங்கு அடிப்படை வசதிகள் கூட முறையாகச் செய்யப்படவில்லை என்பதைத் தொடர்ந்து செய்திகளில் கண்டு வருகிறோம் என தெரிவித்துளளார்.
இந்த நிலையில், கோவிலுக்குள் பக்தர்களுக்கு அமைக்கப்பட்டிருக்கும் கழிப்பறைகளின் அவல நிலையைக் காணொளியாக வெளியிட்ட தமிழக பாஜவைச் சேர்ந்த பிரதீப்ராஜன் வீட்டிற்கு, அதிகாலை நான்கு மணிக்குக் காவல்துறையை அனுப்பி திமுக அரசு மிரட்டியுள்ளதாக தெரிவித்தார்.
எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் திமுக, தனது ஊழலை மக்கள் மத்தியில் வெளிப்படுத்துபவர்கள் மீது, காவல்துறையையோ, குண்டர்களையோ ஏவுவது வழக்கமாகி இருக்கிறது என்றும், திமுக அரசின் இந்த அராஜகப் போக்கினை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் 2026 ஆம் ஆண்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும்போது, இந்து சமய அறநிலையத் துறையைச் சுரண்டிக் கொண்டிருப்பவர்கள் ஒவ்வொருவரும், சிறைக்குச் செல்வது உறுதி என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.