குற்றச் சம்பவங்களைத் தடுக்க நெல்லை நீதிமன்றத்தில் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.
நெல்லை நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஆஜராக வந்த இளைஞர் ஒருவர், பழிக்குப் பழியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
பட்டப் பகலில் நீதிமன்றம் முன்பு நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் அனைத்து நீதிமன்றங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், நெல்லை நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராக வருபவர்களைப் பழிவாங்கச் சதித் திட்டம் தீட்டப்படுவதாக காவல்துறை உயரதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.
இதன் காரணமாக நெல்லை நீதிமன்றத்தில் கண்காணிப்பைப் பலப்படுத்த மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார். அதன்படி நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டதுடன், ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது.
நீதிமன்றத்திற்கு ஆயுதங்களுடன் யாரேனும் வந்தால் அவர்களைச் சுட்டுப் பிடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.