அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அவரது சகோதரர் அசோக் குமார் உள்ளிட்டோர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாஜாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை சார்பில் பதிவு செய்யப்பட்ட சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்த வழக்கில் கடந்த ஜனவரி மாதம் அமலாக்கத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிக்கையில், செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார், உதவியாளர் சண்முகம் உள்ளிட்ட 13 பேரில் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.
இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத்துறை சமர்பித்த கூடுதல் குற்றப்பத்திரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அதில் இடம்பெற்றுள்ள அசோக் குமார் உள்ளிட்டோரை ஏப்ரல் 9-ம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி உத்தரவிட்டதுடன், வழக்கு விசாரணையையும் அன்றைய தினத்திற்கு ஒத்தி வைத்தனர்.