சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சட்டவிரோத மணல் கடத்தல் கும்பலுக்கு வட்டாட்சியர் துணை நிற்பதாக கூறி கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பணிக்கனூர் கிராம எல்லைக்குட்பட்ட இடையப்பட்டியில் மணல் கடத்தப்படுவதாகவும், அனுமதியின்றி கல் உடைக்கப்படுவதாகவும் வருவாய் ஆய்வாளர் சரிதாவிடம் கிராம நிர்வாக அலுவலர் சரவணன் புகார் அளித்துள்ளார்.
ஓமலூர் வட்டாட்சியர் ரவிச்சந்திரன் விஏஓ சரவணனை தொடர்பு கொண்டு ஒருமையில் பேசியதாகவும், நீ எதற்கு இதில் தலையிடுகிறாய் என்று கேட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஓமலூர் வட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்திடம் சரவணன் புகார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, வட்டாட்சியர் அறை முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.