எரிவாயு டேங்கர் லாரிகள் 2வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
மத்திய அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்களுக்கு வாடகை ஒப்பந்த அடிப்படையில் சுமார் 5 ஆயிரம் டேங்கர் லாரிகள் இயக்கப்படும் நிலையில், புதிய வாடகை ஒப்பந்த விதிகளை எண்ணெய் நிறுவனங்கள் அண்மையில் வெளியிட்டன.
அதில், எல்பிஜி லாரிகளுக்கு விதிக்கப்பட்ட பல்வேறு விதிமுறைகளைத் தளர்த்தக் கோரி டேங்கர் லாரிகள் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மூன்று கட்டங்களாக நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததால், நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, புதுச்சேரி, கேரளா ஆகிய 6 மாநிலங்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.