மியான்மரில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடக்கலாம் என அமெரிக்கா புவியியல் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மியான்மர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் கடந்த 28ஆம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 7.7, 6.4 என அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதில், மியன்மரின் பல பகுதிகள் மொத்தமாக உருக்குலைந்தன. பல அடுக்குமாடி கட்டங்கள் சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்ததால் ஏராளமான மக்கள் உயிரிழந்தனர். அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. பல இடங்களில் மின்வசதி தடைப்பட்டுள்ளதால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மியான்மர் நாட்டில் இதுவரை ஆயிரத்து 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தாய்லாந்தில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடக்கலாம் என அமெரிக்கா புவியியல் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இடிபாடுகளுக்கு இடையே ஏராளமான உடல்கள் இருக்கலாம் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.