தமிழகத்தில் 1 முதல் 12ஆம் வகுப்புகளுக்கான தமிழ் பாடத்திட்டம் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக வெளியான தகவலில், தமிழக பள்ளிக்கல்வித் துறையில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு 1 முதல் 12ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டம் மாற்றப்பட்டு இருகட்டமாக 2018 மற்றும் 2019ஆம் ஆண்டில் அமல்படுத்தப்பட்டது.
இதற்கு பரவலாக வரவேற்பு கிடைத்தபோதும், பாடத்திட்டத்தின் அளவு அதிகமாக இருப்பதாக ஆசிரியர்கள், கல்வியாளர்கள் தொடர்ந்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில், மாநில பாடத்திட்டத்தில் 1 முதல் 12-ம் வகுப்புக்கான தமிழ் பாடத்திட்டம் அதிகபட்சம் 40 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தகங்களில் உள்ள நீண்ட பாடப் பகுதிகள் குறைக்கப்பட்டு, பொருத்தமற்ற பாடக் கருத்துகள் நீக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக 6, 7, 8ஆம் வகுப்பு பாடநூல்களில் உள்ள 9 பாடங்கள் 8 ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல, 9 மற்றும் 10ஆம் வகுப்பு பாடநூல்களில் உள்ள 9 பாடங்கள் 7 ஆகவும், 11, 12ஆம் வகுப்பு பாடநூல்களில் உள்ள 8 பாடங்கள் 6 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பாடநூல்கள் அச்சிடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும்,
வரும் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டதும் மாணவர்களுக்குத் திருத்தப்பட்ட புதிய பாடநூல்கள் வழங்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.