கோபிசெட்டிபாளையம் பகுதியில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்ததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் முறிந்து சேதமடைந்தன.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மொட்டணம், மேட்டுக்கடை, அழகம்பாளையம், குப்பிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 40 ஏக்கர் பரப்பளவில் வாழைகள் பயிரிடப்பட்டிருந்தன.
இந்நிலையில், கோபிசெட்டிபாளையத்தில் இரவு 3 மணி நேரம் சூறைக்காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழையால், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
உரிய இழப்பீடு வழங்கினால் மட்டுமே வாழ்வாதாரம் காப்பாற்றப்படும் எனவும் கூறியுள்ளனர். மேலும், வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து சேதமடைந்த மரங்களுக்குரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதே போன்று, சேலம் மாவட்டம், எடப்பாடி பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
வீரப்பம்பாளையம் பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்து வாழை மரங்கள் சாய்ந்ததால், ஏக்கருக்கு 5 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர். மேலும், மழையால் சேதம் அடைந்த வாழை மரங்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.