மீன்கள் இனப்பெருக்கத்திற்கான 61 நாள் மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் ஆழ்கடலில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும் காலமாகும். இதன் காரணமாகவும், மீன் வளத்தை பாதுகாக்கவும் வேண்டி, ஆண்டுதோறும் இந்த காலக்கட்டங்களில் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த காலத்தில் 3 கடல்மைல் தூரத்திற்கு அப்பால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையொட்டி தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட 12 மாவட்ட மீனவர்கள் இன்று முதல் ஜூன் 14 வரை கடலுக்கு செல்ல முடியாது. எனவே பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கான படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.