அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கு எதிராக இபிஎஸ் தாக்கல் செய்த மனு திரும்ப பெறப்பட்டதையடுத்து வழக்கை முடித்து வைத்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுகவிலிருந்து கடந்த 2017 ஆம் ஆண்டு நீக்கப்பட்ட டிடிவி தினகரன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார்.
அப்போது, அதிமுகவின் கொடியில் உள்ளது போலவே கருப்பு, வெள்ளை, சிவப்பு ஆகிய நிறங்களையும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதவின் புகைப்படத்தையும் தனது கட்சிக் கொடியில் பயன்படுத்தினார்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கடந்த 2019ம் ஆண்டு சென்னை 3வது கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.
அதில், அதிமுக கொடியில் உள்ள நிறங்கள் மற்றும் ஜெயலலிதாவின் படம் உள்ள கொடியை, அமமுக பயன்படுத்த தடை விதிக்க வேண்டுமெனவும், 25 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
கடந்த 5 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கானது, உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஆர்.கே.பி. தமிழரசி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, அதிமுக பொதுச்செயலாளர் என்ற முறையில் வழக்கை திரும்ப பெறுவதாகவும், இதனை நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, டிடிவி தினகரனுக்கு எதிரான வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.