வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த காட்டுக்கொல்லை கிராமத்தில் ஐந்து தலைமுறைக்கும் மேலாக 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆனால் அந்த கிராமம் வக்பு வாரியத்திற்குச் சொந்தம் எனக் கூறி நோட்டீஸ் வந்ததால் அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவில் உள்ள 6 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு கிராமம் தான் காட்டுக்கொல்லை. இந்த கிராமத்தில் சுமார் 5 தலைமுறைக்கும் மேலாக 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடு கட்டி வசித்தும், விவசாய செய்தும் வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி அன்று சையத் அலி சுல்தான் ஷா என்பவரின் பெயரில் கிராம மக்களுக்கு நோட்டீஸ் வந்துள்ளது. அதில் நீங்கள் வசிக்கும் நிலமானது வக்பு வாரியத்துக்குச் சொந்தமானது என்றும், நிலத்தினை புதுப்பிக்க வேண்டும் என்றால் நிர்ணயிக்கப்பட்ட தொகையை வழங்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் உடனடியாக புதுப்பிக்கவில்லை எனில் நிலத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நோட்டீஸை கண்டு அதிர்ச்சியடைந்த காட்டுக்கொல்லை கிராம மக்களுக்கு இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த மகேஷ் என்பவர் உதவ முன்வந்துள்ளார். இதையடுத்து மகேஷின் தலைமையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்ற மக்கள், நிலத்தில் தாங்கள் வசிப்பதற்கு அனுமதி அளித்த ஆவணங்களை ஒப்படைத்து தங்களுக்கு நீதி வேண்டும் எனக் கேட்டுள்ளனர். அப்போது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கூறியதாகக் கிராம மக்கள் தெரிவித்தனர்.
மேலும் இந்த நிலத்தைப் பல வருடங்களுக்கு முன்பு கூலி வேலை செய்த பணத்தைக் கொடுத்து வாங்கியதாகப் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். நிலத்தில் வீடு கட்ட, மின் இணைப்பு பெற என ஒவ்வொரு விஷயத்திற்கும் தனிப்பட்ட முறையில் இதற்கு முன்பு இருந்த முத்தவல்லி, பணம் பெற்றதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர்.
வக்பு சொத்து என்றால் எதற்குத் தனிப்பட்ட முறையில் பணம் பெற்று இடத்தை ஒப்படைக்க வேண்டும் எனக் கேள்வி எழுப்பும் மக்கள் இதற்காக தாங்கள் தண்டனை அனுபவிக்க முடியாது என வேதனை தெரிவிக்கின்றனர்.
நிலத்தைப் பணம் கொடுத்து வாங்கி வீடு கட்டி வாழ்ந்து வருவதாகக் கூறும் காட்டுக்கொல்லை வார்டு உறுப்பினர் மணிகண்டன், வக்பு வாரியத்தின் சொத்து வரி கட்ட வில்லை எனில் வெளியேறுங்கள் என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது எனத் தெரிவித்தார். உடனடியாக தீர்வு கிடைக்கவில்லை எனில் காட்டுக்கொல்லை கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
பல ஆண்டு காலமாக வசிக்கும் தங்களைப் பாதுகாக்க, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே காட்டுக்கொல்லை கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.