மேட்டூர் அணை ஜூன் 12ஆம் தேதி திறக்கப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய அதிமுக உறுப்பினர் காமராஜ், மேட்டூர் அணையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் முதல் மே மாதத்திற்குள் தூர்வாரும் பணிகளை முடிக்க வேண்டியது கட்டாயம் என தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையால் வடிகால் மற்றும் ஆறுகளில் மணல் திட்டு ஏற்பட்டிருப்பதாகவும், அவற்றை அகற்றி தண்ணீர் தடையின்றி செல்வதற்காக சுமார் 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார்.
98 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெறும் இந்த பணிகளை கண்காணிக்க ஒவ்வொரு டெல்டா மாவட்டத்திற்கும் தனியாக மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாகவும், தூர்வாரும் பணி மே மாதத்திற்குள் முடிக்கப்பட்டு ஜூன் 12ஆம் தேதி அணை திறக்கப்படும் எனவும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.