கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வருவதற்கான மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
தமிழ்நாடு பணக்கடன் வழங்குபவர்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கான சட்டமுன்வடிவு பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
கடனை வலுக்கட்டாயமாக வசூலிப்பதால் பொதுமக்கள் மிகுந்த இன்னல்களுக்கு உள்ளவதாகவும், அதில் இருந்து பொருளாதாரத்தில் பின் தங்கிய மற்றும் நலிவடைந்த பிரிவினரை பாதுகாக்கும் வகையில் சட்ட திருத்தம் செய்யப்பட உள்ளதாகவும் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடன் வழங்கிய நிறுவனம் கடன் பெற்றவரையோ அல்லது அவரது குடும்பத்தினரையோ வலுக்கட்டாய நடவடிக்கைக்கு உட்படுத்தவோ, மிரட்டவோ, பின் தொடரவோ, அவர்களது சொத்துக்களை பறிக்கவோ கூடாது என்ற வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட உள்ளது.
கடன் பெற்றவரிடமோ அல்லது அவரது குடும்பத்தினரிடமோ வலுக்கட்டாயமாக பணம் வசூலிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட உள்ளது.