பரமத்திவேலூர் அருகே மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டியதில், மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், கணவனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டம் பொத்தனூரை சேர்ந்த ஜெகதீசன் என்பவர் இந்து முன்னணியில் மாவட்டச் செயலாளராக உள்ளார்.
நள்ளிரவில் ஜெகதீசனின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் அவருடைய மனைவி கீதாவைச் சரமாரியாக வெட்டி உள்ளனர். இதனைத் தடுக்க முயன்ற ஜெகதீசனுக்கும், பலத்த வெட்டுக் காயம் ஏற்பட்டது.
அப்போது மர்ம நபர்களை வெளியே தள்ளி கதவை உள்பகுதியில் தாழிட்டுக் கொண்டு, ஜெகதீசன் சத்தம் போட்டதால் அவர்கள் தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது.
இதில், படுகாயமடைந்த கீதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், படுகாயமடைந்த ஜெகதீசனுக்கு மருத்துவமனையில் தீவிர சித்தை அளிக்கப்பட்டு வரும் நிலையில், சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.