மாமியார் வீட்டுச் சாவியை வலுக்கட்டாயமாகப் பறித்து மருமகளிடம் கொடுத்துக் கட்ட பஞ்சாயத்தில் ஈடுபட்ட பெண் காவல் ஆய்வாளருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அனகாபுத்தூரை சேர்ந்த சகாய பிர்வீன் என்பவர், மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த புகார் மனுவில், குடும்ப பிரச்சனை காரணமாகத் தனது மனைவி மேரி மெர்சி பிரிந்து வாழ்ந்து வருவதாகக் கூறியுள்ளார்.
மனைவியின் உறவினரான ஆய்வாளர் ஆண்டனி ஸ்டாலின் தூண்டுதலின்படி, தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த சுமதி, தனது தாய் பெயரில் உள்ள வீட்டின் சாவியை வலுக்கட்டாயமாகப் பறித்து மனைவியிடம் கொடுத்துக் கட்டபஞ்சாயத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த புகார் மனுவை விசாரித்த மாநில மனித உரிமை ஆணையம் பெண் ஆய்வாளர் மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளது நிரூபணமாகியுள்ளதால், பாதிக்கப்பட்ட சகாய பிர்வீனுக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.
இத்தொகையைப் பெண் ஆய்வாளர் சுமதியிடம் இருந்து வசூலிக்க உத்தரவிட்ட ஆணையம், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைத்துள்ளது.