தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே கீழே கிடந்த 15 சவரன் தங்க நகையை உரியவரிடம் ஒப்படைத்த தேனீர் கடைக்காரருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
உடன்குடியில் உள்ள செட்டியாபத்து ஐந்து வீடு சுவாமி கோயிலின் அருகே காதர் மீரா சாகிப் என்பவர் தேனீர் கடை நடத்தி வருகிறார். இவர் வழக்கம் போல கடையில் இருந்த போது கோயிலின் முன்பாக தங்க சங்கிலி ஒன்று கிடந்ததை பார்த்தார்.
அதனை கையிலெடுத்த அவர் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தார். 15 சவரன் தங்க நகையை பெற்றுக்கொண்ட கோயில் நிர்வாகம் ஒலிப்பெருக்கி மூலம் நகை கீழே கிடந்தது குறித்து அறிவித்தது. இதனையறிந்த நகையின் உரிமையாளர் அடையாளங்களை கூறி அதனை பெற்றுக்கொண்டார்.
கீழே கிடந்த நகையை உரியவரிடம் ஒப்படைத்த காதர் மீரா சாகிப்க்கு கோயில் நிர்வாகம், பக்தர்கள் உள்ளிட்ட பலரும் பாரட்டுக்களை தெரிவித்தனர்.