நல்ல கதையைக் கொடுத்தால் அதனைப் படிக்க வாசகர்கள் தயாராக இருப்பதாகக் கலைமகள் இலக்கிய மாத இதழ் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கி.வா.ஜ., குடும்பத்தினர் மற்றும் கலைமகள் இலக்கிய மாத இதழ் இணைந்து நடத்திய, சிறுகதைப் போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்குப் பரிசளிப்பு விழா, சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரியில் நடைபெற்றது.
இதில், பிரபல எழுத்தாளர் ராஜேஷ் குமார் சார்பில், அவரது மகன் ராம்குமார், எஸ்.ஆர்.எம்., பல்கலைக் கழக தமிழ்ப் பேராயத்தின் தலைவர் கரு. நாகராஜன், பட்டம் இதழ் ஆசிரியர் வெங்கடேஷ் ஆகியோருக்கு விருதுகளைத் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் அவ்வை அருள் வழங்கி கௌரவித்தார்.
தொடர்ந்து விழாவில் பேசிய கலைமகள் இலக்கிய மாத இதழ் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் சிறந்த எழுத்தாளர்களை வெளி உலகிற்கு அடையாளப்படுத்துவதே இப்போட்டியின் சிறப்பு எனத் தெரிவித்தார்.
மேலும் சிறுகதைகளைப் படிக்கப் பலரும் ஆர்வம் காட்டி வருவதாகவும், நல்ல கதையைக் கொடுத்தால், அதைப் படிக்க வாசகர்கள் தயாராக இருப்பதாகவும் கூறினார்.