நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழகத்தில் பருவத்தேர்வின் வினாத்தாள் கசிந்ததால் இன்டஸ்ட்டிரியல் லா தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த 106 கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் கல்லூரிகளில் காமர்ஸ் பாடப்பிரிவில் இன்டஸ்ட்டிரியல் லா என்ற பாடத்திற்கான தேர்வு நடைபெறவிருந்த நிலையில், வினாத்தாள் கசிந்துள்ளதால் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவலில், இன்டஸ்ட்டிரியல் லா பாடத்தின் தேர்வு வினாத்தாள் கசிந்துவிட்டதால், வேறு வினாத்தாள் தயாரிக்கப்பட்டுத் தேர்வு நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஒத்திவைக்கப்பட்ட இன்டஸ்ட்டிரியல் லா தேர்வு மே 30, 31 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும், இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் பல்கலைக்கழக தேர்வாளர் தெரிவித்துள்ளார்.