தடை செய்யப்பட்டுள்ள இஸ்லாமியப் பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்புடைய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களே முன்னின்று, திட்டமிட்டு, இந்துக்களுக்கு எதிரான முர்ஷிதாபாத் வன்முறையை நடத்தியுள்ளனர் என்று உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கை தெரிவித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
மேற்கு வங்கத்தில் உள்ள முர்ஷிதாபாத்தில் 66 சதவீதத்துக்கும் அதிகமான இஸ்லாமியர்கள் வசிக்கின்றனர். அனைத்து தேர்தல்களிலும் திரிணாமுல் காங்கிரஸ் இந்தப் பகுதியில் அனைத்து இடங்களையும் கைப்பற்றியுள்ளது. முர்ஷிதாபாத்தின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். அதே நேரத்தில் மாநில சட்டமன்றத்தின் 22 உறுப்பினர்களில் 20 பேர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.
மத வன்முறைகள் நடந்த வடக்கு முர்ஷிதாபாத்தின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள். அதே போல் நகராட்சிகளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வசமே உள்ளன. ஒரு போராட்டம் திடீரென்று வன்முறையாக மாறும் என்று முர்ஷிதாபாத் இந்துக்கள் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்.
வக்ப் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, முர்ஷிதாபாத்தில் நடந்த போராட்டம் மதக்கலவரமாக மாறியது. வன்முறை கொழுந்து விட்டு எரிந்தது. குறிவைக்கப் பட்டு இந்துக்கள் தாக்கப் பட்டனர்.100க்கும் மேற்பட்ட இந்துக்களின் வீடுகள் மற்றும் கடைகள் சூறையாடப் பட்டன. இந்து கோயில்களும் இடிக்கப் பட்டன. யாருடைய வீடுகள் மற்றும் கடைகள் சூறையாடப்பட்டதோ அவர்கள் மட்டுமின்றி, இந்தியாவே அதிர்ச்சியில் உறைந்தது.
மாநிலக் காவல்துறையினர் சரியான நேரத்தில் பொதுமக்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர். தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய NGO-க்கள், சமூக ஊடகத் தளங்கள் மூலமாக இந்துக்களுக்கு எதிரான பயங்கரவாதத்தைப் பரப்பி, முர்ஷிதாபாத்தில் ஒரு திட்டமிட்ட வன்முறையை இந்துக்களுக்கு எதிராக நடத்தியுள்ளனர் என தற்போது நடத்தப்பட்ட புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.
25,000 ஆசிரியர்களை பணிநீக்கம் செய்ததை உறுதி செய்த உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்து பேரணி என்று ஏப்ரல் 10ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதற்கு அடுத்த நாள்,வக்ப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் , இரண்டிலும் ஒரே இளைஞர்களே பங்கேற்றுள்ளதை ஊடகத்தில் வந்த காட்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன.
முர்ஷிதாபாத் ரத்த தான முகாம்களை ஏற்பாடு செய்து இஸ்லாமிய இளைஞர்களைக் கவர்ந்த Asomoyer Alor Bati மற்றும் Golden Star Group ஆகிய NGO-க்கள், முர்ஷிதாபாத் வன்முறைக்கு முக்கிய காரணமாக உள்ளன. இந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் துணையுடன் (Kausar)கௌசர்,(Mostakin)மோஸ்டாகின் மற்றும் (Rajesh Sheikh) ராஜேஷ் ஷேக் ஆகியோர் வன்முறையை முன்னின்று வழிநடத்தியதாகத் தெரிய வருகிறது.
தடைசெய்ய பட்ட அமைப்பான PFI உடன் தொடர்புடைய ராஜேஷ், SDPI கட்சி வேட்பாளருக்காகத் தேர்தல் பிரச்சாரத்திலும் ஆட்களைத் திரட்டி வந்துள்ளார். தடை செய்யப்பட்டுள்ள சிமி அமைப்பின் உறுப்பினரான Dr Bashir Sheikh என்பவரும் முர்ஷிதாபாத் வன்முறைக்கு மும்முரமாகச் செயலாற்றியுள்ளதாகக் கண்டறியப் பட்டுள்ளது.
இவர்கள் தலைமறைவாக இருப்பதாக அரசு அதிகாரப்பூர்வமாகக் கூறியுள்ள நிலையில், முர்ஷிதாபாத்தில் சுதந்திரமாகச் சுற்றித் திரிவதாகக் கூறப்படுகிறது. முர்ஷிதாபாத் வன்முறையில் ஈடுபட்ட இஸ்லாமிய சிறுவர்களுக்கு வக்ஃப் என்றால் என்னவென்று கூடத் தெரியாதது மட்டுமில்லை, அவர்களால் நமாஸ் ஓதவும் முடியவில்லை என்றும் பத்திரிகை புலனாய்வில் தெரியவந்துள்ளது.
வீடியோ மூலமும் மத இலட்சியத்துக்காக இஸ்லாத்துக்குத் தங்கள் பங்களிப்பை வழங்குமாறு, இஸ்லாமிய இமாம்கள், மீண்டும் மீண்டும் பொது அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். உயர்நீதிமன்றம் அமைத்த மூன்று பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழு, வன்முறை நடந்த இடத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கவுன்சிலர், சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட முர்ஷிதாபாத் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் இருந்ததை உறுதிப் படுத்தியுள்ளது.
நீதிபதிகள் சௌமன் சென் மற்றும் நீதிபதி ராஜா பாசு சவுத்ரி ஆகியோர் அடங்கியஅமர்வின் முன் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், கொடூரமான முறையில் இந்துக்கள் தாக்கப்பட்டதாகவும், அதைத் தடுக்க காவல்துறையினர் முன்வரவில்லை என்றும், இந்துக்கள் வீடுகளுக்கு வைக்கப்பட்ட தீயை அணைக்க விடாதபடி, தண்ணீர் குழாய்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு, சட்டசபைத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், இந்த விசாரணை அறிக்கை நிச்சயம் மம்தா பானர்ஜிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.