கறம்பக்குடி அருகே உள்ள வீராத்தாள் அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மது எடுப்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா காட்டாத்தி பகுதியில் உள்ள வீராத்தாள் அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், நடப்பாண்டுக்கான வைகாசி திருவிழாவில் வீராத்தாள் அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களான அய்யனார், கருப்பையா சுவாமி ஆகிய பரிவார தெய்வங்களுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் தலையில் மதுக்குடங்களை சுமந்து ஊர்வலமாகச் சென்றனர். பானைகளில் நவதானியங்களை நிரப்பி, அதில் தென்னை பாலைகளை வைத்து, அலங்கரிக்கப்பட்ட மதுக்குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்து அய்யனார் கோயிலில் வைத்து வழிபாடு நடத்தினர்.
பின்னர் வீரத்தாள் அம்மன் கோயிலுக்கு மதுக்குடங்களை எடுத்துச் சென்று கும்மியடித்தும் குலவையிட்டும் அம்மனை வழிபட்டனர். இந்த நிகழ்வில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.