இந்தியாவின் பாதுகாப்பு மேம்பாடு நடவடிக்கையாக 3,000 கோடி ரூபாய் மதிப்புள்ள 500 (INVAR) இன்வார் ஏவுகணைகளை அரசு நிறுவனமான பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்திடமிருந்து வாங்குவதற்கான ஒப்பந்தத்தைப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் இறுதி செய்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இந்த மாத தொடக்கத்தில், இந்தியாவின் பாதுகாப்புத் தயார்நிலையை வலுப்படுத்த, சுமார் 40,000 கோடி ரூபாய் மதிப்பிலான அவசரக்கால கொள்முதலுக்குப் பாதுகாப்பு தளவாட கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்தது. முன்னதாக, உள்நாட்டு பாதுகாப்புத் திறன்களை மேம்படுத்தும் வகையில், இந்தியாவின் லட்சிய ஐந்தாவது தலைமுறை போர் ஜெட் திட்டமான மேம்பட்ட நடுத்தர போர் விமானம் (AMCA) திட்டத்துக்கான செயல்பாட்டு மாதிரியை மத்திய அரசு அங்கீகரித்தது. ஏற்கெனவே, இலகுரக போர் விமானம் (LCA) தேஜாஸின் வெற்றியைத் தொடர்ந்து, நடுத்தர போர் விமானம் திட்டம் உருவாக்கப் பட்டது.
இந்தச் சூழலில், பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்திடமிருந்து 500 INVAR- இன்வார் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளுக்கான 3,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டரை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் இறுதி செய்துள்ளது. இந்த கொள்முதல் நாட்டின் மேற்கு மற்றும் வடக்கு எல்லைகளில் ராணுவத் தயார்நிலையை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
3,000 கோடி ரூபாய்க்கு மேல் உள்ள எந்தவொரு ஒப்பந்தத்துக்கும் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் ஒப்புதல் தேவை என்பதால் அதைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது,T-90 பீரங்கிகளை மேம்பட்ட ஏவுகணை அமைப்புகளுடன் பொருத்துவதன் மூலம் இந்தியாவின் கவச போர்த் திறன்களை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக நவீன போர்க்களத் தேவைகளின் பின்னணியில், இந்திய இராணுவத்தின் துப்பாக்கிச் சூடு சக்தியை இந்த INVAR- ஏவுகணைகள் மேம்படுத்தும் என்று கூறப் படுகிறது.
தரைவழியாக முன்னேறும் எதிரி பீரங்கிகளைத் தாக்கி அழிப்பதற்கு முக்கிய ஆயுதமாக இந்த INVAR- ஏவுகணைகள் பயன்படுத்தப்படுகின்றன. அனைத்து வானிலையிலும் பகல் மற்றும் இரவு என எல்லா நேரங்களிலும் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஏவுகணைகள் கவச வாகனங்களை அழிக்கும் திறன் கொண்டவை ஆகும்.
சிறப்பு விரைவு எதிர்வினைப் படைகள், தரைப்படைகள் மற்றும் விமானப் படைகளுக்கு இந்த ஏவுகணைகள் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே “ஹெலினா” மற்றும் “துருவாஸ்த்ரா” போன்ற உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ATGM அமைப்புகளை இந்தியா உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.