ஈரோடு மத்திய பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்திய பெண்ணிடம் வசூல் வேட்டையில் ஈடுபட்ட நபரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஈரோடு மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு ஏராளமான பேருந்துகள் சென்று வரும் நிலையில், பேருந்து நிலையம் வந்த பெண் தனது இருசக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்தி உள்ளார். மீண்டும் வந்து வாகனத்தை எடுக்கும்போது அங்கு வந்த நபர், ரசீது கொடுத்து பணம் கேட்டுள்ளார்.
அதற்கு அந்த பெண் பணம் தரமறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை அங்கு கூடியிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
இந்த வீடியோ வைரலான நிலையில், மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடம் வசூல் செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.