கன்னியாகுமரி கடல் பகுதிகளில் கண்டெய்னரில் இருந்த பொருட்கள் கரை ஒதுங்கினால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
கேரளா மாநிலம், கொச்சி அருகே அரபிக்கடலில் லைபீரியா நாட்டை சேர்ந்த சரக்கு கப்பல் 634 கண்டெய்னர்களுடன் கடலில் மூழ்கியது. கப்பலில் இருந்த 24 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், கடலில் மூழ்கிய கண்டெய்னர்கள் கேரள கடலோர பகுதிகளில் கரை ஒதுங்கி வருகிறது.
இந்நிலையில், இரவிபுத்தன்துறை, பூத்துறை, இனயம், சின்னதுறை ஆகிய கடற்கரை பகுதியில் சில சாக்கு மூட்டைகள் கரை ஒதுங்கியுள்ளன. இது குறித்து மீனவர்கள் அளித்த தகவலின்பேரில் கடற்கரை பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது கரை ஒதுங்கிய பொருட்கள் துபாய் நாட்டில் தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக் துகள்கள் என்றும், அவற்றில் சில மூட்டைகள் கரை ஒதுங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், கரை ஒதுங்கும் பொருட்களை யாரும் தொட வேண்டாம் என்றும், இதுபோன்ற பொருட்களை கண்டால் மீனவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.