சேலம் மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலரை திமுக கவுன்சிலர்கள் தாக்கியதால் பதற்றம் நிலவியது.
சேலம் மாநகராட்சி கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாமன்ற எதிர்க்கட்சித் தலைவர் யாதவமூர்த்தி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினார். தொடர்ந்து அமைச்சர் ராஜேந்திரனின் ஆதரவாளர்கள் ஒப்பந்தம் எடுத்து முறைகேடு செய்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இதனால் ஆத்திரமடைந்த திமுக கவுன்சிலர்கள் சுகாசினி, பச்சையம்மாள், இளங்கோவன் ஆகியோர் யாதவமூர்த்தியை சுற்றி வளைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து திமுக கவுன்சிலர் சுகாசினி, யாதவமூர்த்தி மீது தாக்குதல் நடத்தினார்.
அப்போது அவருக்கு ஆதரவாக அதிமுக கவுன்சிலர்களும் திரண்டதால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் மேயர் ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் இளங்கோவன் ஆகியோர் கூட்டத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு கூட்டரங்கை விட்டு வெளியேறினர்.
தொடர்ந்து திமுக கவுன்சிலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் வரை கூட்ட அரங்கை விட்டு வெளியேற மாட்டோம் எனக்கூறி அதிமுக கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து சேலம் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர்பாலசுப்பிரமணியன் போராட்டத்தில் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சட்டமன்ற உறுப்பினர் பாலசுப்பிரமணியன், முறைகேடு குறித்து கேள்வி எழுப்பிய மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் மீது தாக்குதல் நடத்திய திமுக கவுன்சிலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.