ஐபிஎல் தொடர் இறுதிப்போட்டிக்கான முதல் தகுதிச்சுற்று போட்டியில் பஞ்சாப் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் இறுதி போட்டிக்கு தகுதி பெறுவதற்கான குவாலிபயர் 1 போட்டி பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகளுக்கிடையே நடைபெற்றது. பஞ்சாப் மாநிலம் முல்லான்பூரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணி தொடக்கம் முதலே பெங்களூரு அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது.
அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த அந்த அணி, 14.1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சிறப்பாக பந்துவீசிய ஹேசல்வுட் மற்றும் சுயாஷ் ஷர்மா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து, 102 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி, 10 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 106 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் பில் சால்ட் 56 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதன் மூலம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக முன்னேறியது.