பீகாரில் இருந்து மாவோயிஸ்ட்டுகள் முற்றிலும் ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை எனப் பிரதமர் மோடி சூளுரைத்துள்ளார்.
பீகார் மாநிலம், கரகாட் பகுதியில் அரசு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது, 48 ஆயிரத்து 520 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி, புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு மதுபானி கலையால் உருவாக்கப்பட்ட சால்வை மற்றும் வெள்ளி நாணயம் பரிசாக வழங்கப்பட்டது.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, 2014ஆம் ஆண்டுக்கு முன்பு பீகாரில் 75க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் மாவோயிஸ்ட்டுகளால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், தற்போது 18 மாவட்டங்கள் மட்டுமே பாதிப்பை எதிர்கொள்வதாகவும் கூறினார்.
பீகாரில் இருந்து மாவோயிஸ்ட்டுகள் முற்றிலும் ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை எனக்கூறிய பிரதமர் மோடி, பீகாரில் ரயில்வே துறை வேகமாக வளர்ச்சியடைந்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும், எதிர்க்கட்சிகளின் பொய்கள் மற்றும் வஞ்சகங்கள் கண்டு ஏமாறாமல் பீகார் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.