காஞ்சிபுரத்தில் உடல் அசதி மற்றும் தலைவலி காரணமாக ஆரம்பச் சுகாதார நிலையம் சென்ற 70 வயது மூதாட்டி, B12 ஊசி போட்ட சிறிது நேரத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன காஞ்சிபுரம் பகுதியில் நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு திரிகாலிமேடு பகுதியைச் சேர்ந்த கண்ணம்மாள் என்ற 70 வயது மூதாட்டி, தலைவலி மற்றும் உடல் அசதிக்காக மருத்துவம் பார்க்க வந்துள்ளார்.
அப்போது அவருக்கு மாத்திரைகள் பரிந்துரைத்த பெண் மருத்துவர், மூதாட்டியின் உடல் அசதிக்காக B12 ஊசி போட்டுள்ளார். அதன் பின்னர் அங்கிருந்து வெளியே சென்ற மூதாட்டி ஆரம்பச் சுகாதார நிலைய வாயிலிலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக விஷ்ணு காஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், முறையான சிகிச்சை அளிக்காததே மூதாட்டியின் உயிரிழப்புக்குக் காரணம் எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.