நெல்லையில் சுகாதாரமற்ற குடிநீர் விநியோகிக்கப்படுவதாகவும், இதனால் 200-க்கும் மேற்பட்டோருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட 45வது வார்டான குறிச்சி பகுதியில் 350-க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். அங்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில், அசுத்தமாகவும், கழிவுநீர் கலந்தும் சுகாதாரமற்ற முறையில் குடிநீர் விநியோகிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால் 200-க்கும் மேற்பட்டோருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதியினர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மாமன்ற உறுப்பினர் அமுதா குற்றஞ்சாட்டி உள்ளார். மேலும், இதுதொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்யவில்லை என்றும் அவர் புகார் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து சுகாதாரமற்ற குடிநீரே மஞ்சள் காமாலைக்குக் காரணமென அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். மேலும், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறும் மக்கள், சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.