ஒரு வாரத்திற்கு பிறகு குற்றால அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்தனர்.
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த வாரம் முழுவதும் பெய்த தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
தற்போது, மலைப் பகுதிகளில் மழை குறைந்ததால் அருவிகளில் சீரான நீர்வரத்து காணப்படுகிறது. இதனால், குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிக்க விதிக்கப்பட்ட தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால் குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் ஆனந்த குளியலிட்டு மகிழ்ச்சியடைந்தனர்.