வரி செலுத்தாத கடை முன் சேலம் மாநகராட்சி ஊழியர்கள் சாக்கடை கழிவுகளைக் கொட்டிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
சேலம் மாநகராட்சியில் உள்ள கடைகளுக்குக் குப்பை வரி, தொழில் வரி உட்பட பல்வேறு வரிகள் விதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும், கடை உரிமையாளர்களிடம் இருந்து அடாவடியாக வரி வசூலிக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.
இந்த நிலையில், சாக்கடை கால்வாய் அடைப்பை எடுப்பதாகக் கூறி, வரி செலுத்தாத கடை முன் மாநகராட்சி ஊழியர்கள் கழிவுகளை கொட்டி விட்டுச் சென்றுள்ளனர்.
மாநகராட்சி ஊழியர்களின் செயலால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், துர்நாற்றம் காரணமாக, கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்து உள்ளதாகக் கடை உரிமையாளர் வேதனை தெரிவித்துள்ளார்.