பிரேசில், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விளக்கமளித்தனர்.
பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க அமைக்கப்பட்ட காங்கிரஸ் எம்.பி சசிதரூர் தலைமையிலான குழு பிரேசில் சென்றது.
அங்குத் துணை அதிபர் ஜெரால்டோ ஆல்க்மினை சந்தித்த எம்பிக்கள் குழு, ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக விளக்கமளித்தனர்.
பின்னர் பேட்டியளித்த அவர்கள், பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் பணம், பயங்கரவாதத்தை ஆதரிப்பதற்கும், ஆயுதம் ஏந்துவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதாகக் குற்றம்சாட்டினர்.
இதனை தொடர்ந்து பேசிய பிரேசில் துணை அதிபர் ஜெரால்டோ ஆல்க்மின், பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்துக் கொள்வதாகவும், பிரேசில் எப்போதும் அமைதியை ஊக்குவிக்கும் நாடாக இருக்குமெனவும் கூறினார்.
மேலும், இந்தியாவுடனான தங்கள் உறவை வலுப்படுத்த இலக்கு வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதேப்போல், ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் சென்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையிலான குழுவினர், ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து எடுத்துரைத்தனர்.
இதனையடுத்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த கனிமொழி, பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளையும், பயங்கரவாத குழுக்களையும் வேறுபடுத்திப் பார்க்க இந்தியா தயாராக இல்லை எனக் கூறினார்.