நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகளை நியமன உறுப்பினர்களாக பணியமர்த்தும் சட்டமசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் உள்ள கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் மாற்றுத்திறனாளிகளை நேரடியாக நியமிக்கும் வகையில் சட்டத்திருத்த மசோதாக்கள் சட்டமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டன.
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் நோக்கில் கொண்டுவரப்பட்ட இந்த மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மூலம், நகரப்புற உள்ளாட்சிகளில் 650 மாற்றுத்திறனாளிகளும், கிராமப்புற உள்ளாட்சிகளில் 12 ஆயிரத்து 913 பேரும் நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட உள்ளனர். மாற்றுத்திறனாளிகளுக்கான நியமன உறுப்பினர் சட்டத்தைச் செயல்படுத்துவதற்கான, விரிவான வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழக அரசு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.