மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் முறையாகச் சிகிச்சை அளிக்காததால் மாணவன் உயிரிழந்ததாகக் குற்றம் சாட்டி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் எலந்தங்குடியைச் சேர்ந்த 14 வயதான முபின் அலி என்ற சிறுவனைக் கடந்த 31-ஆம் தேதி விஷப்பூச்சி கடித்தது. இதில், மயங்கி விழுந்த சிறுவன் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காகத் திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுவன் உயிரிழந்தார். இந்த நிலையில், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் முறையாகச் சிகிச்சை அளிக்காமல் காலதாமதப்படுத்தியதே உயிரிழப்புக்குக் காரணம் எனக் குற்றம் சாட்டி, சிறுவனின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த மயிலாடுதுறை பொறுப்பு கோட்டாட்சியர் அர்ச்சனா, விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.