தமிழகம் முழுவதும் பொதுமக்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்த தனியார் நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
பரிவார் டெய்ரீஸ் என்ற நிதி நிறுவனம், மத்தியப்பிரதேசத்தைத் தலைமையிடமாகக் கொண்டு பொதுமக்களிடம் முதலீட்டைப் பெற்று வந்தது.
தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், ஏராளமான மக்களிடம் பணம் வசூலித்ததாகக் கூறப்படுகிறது.
அதிக வட்டி கிடைக்கும் என ஆசைப்பட்டு பல்லாயிரக்கணக்கானோர் இந்த நிதி நிறுவனத்தில் தங்களது பணத்தை முதலீடு செய்தனர்.
ஆனால் கூறியபடி முதிர்வுத் தொகையை வழங்காமல், தமிழகத்தில் செயல்பட்டு வந்த 12 அலுவலகங்களையும் இந்நிறுவனம் மூடியது.
இதுகுறித்து புகார் கொடுக்க மாநிலம் முழுவதும் 13 இடங்களை மத்திய புலனாய்வுத்துறை அறிவித்தது. அதன்படி தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆயிரக்கணக்கானோர் நேற்று புகார் அளித்தனர்.