ராணுவ வீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து செய்தி வெளியிடுவதை தவிர்க்க வேண்டுமென செய்தி நிறுவனங்களுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் பணியில் உள்ள அல்லது ஓய்வு பெற்ற அதிகாரிகளின் வீடுகள் மற்றும் குடும்பத்தினரை, தனிப்பட்ட செய்திகள், பேட்டிகளுக்காக தொடர்பு கொள்வதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
வீட்டு முகவரி, குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்கள் அல்லது தேவையில்லாத தகவல்களை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
ஆயுதப்படைகளின் நடவடிக்கைகள், அதன் தொழில்முறை மற்றும் செயல்பாட்டு அம்சங்கள் குறித்து செய்தி நிறுவனங்கள் கவனம் செலுத்தலாம் என்றும், தனிப்பட்ட யூகங்களை தவிர்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் செய்தி நிறுவனங்களின் ஆக்கப்பூர்வமான தொடர்பு மற்றும் வெளிப்படைத் தன்மைக்கு பாதுகாப்பு அமைச்சகம் உறுதுணையாக இருக்கும் எனவும் கூறியுள்ளது.
அதேநேரத்தில், பொறுப்பாக நடந்து கொள்வதுடன், நாட்டிற்காக பணியாற்றுபவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் கண்ணியத்தை மதிக்க வேண்டும் என்றும் செய்தி நிறுவனங்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.