உணவு விற்பனை தொடர்பாக 14 வழிகாட்டு நெறிமுறைகளை உணவு பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அனைத்து உணவு வணிகர்களும், உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவு வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் தண்ணீரைப் பகுப்பாய்வு செய்து வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உணவு சமைக்கப் பயன்படுத்தப்படும் எண்ணெய்யை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
நியூஸ் பேப்பர் போன்ற அச்சிட்ட காகிதங்களில் உணவுப் பொருள்களைப் பரிமாறவோ, பொட்டலமிடவோ கூடாது என்றும் சிக்கன், பஜ்ஜி, கோபி மஞ்சூரியன் உள்ளிட்ட உணவு வகைகளில் செயற்கை நிறமிகளைச் சேர்க்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவகங்கள் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாமல் உணவு விற்றாலோ, தயாரித்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உணவு பாதுகாப்புத்துறை சட்டத்தின்படி கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.