ஆர்சிபி அணியின் ஐபிஎல் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை தோற்கடித்து பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. 18 ஆண்டு கால ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக பெங்களூரு அணி மகுடம் சூடியதை ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், கோப்பையுடன் வீரர்கள் பெங்களூரு திரும்பினர். அப்போது அவர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து, ஆர்சிபி அணி வீரர்களுக்கு கர்நாடகா சட்டப்பேரவை வளாகமான விதான் சவுதாவில் முதலமைச்சர் சித்தராமையா, மைசூர் தலைப்பாகை, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் சின்னசாமி மைதானத்தில் வீரர்களை கவுரவிக்க அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக ஆயிரக்கணக்கானோர் அங்கு ஒரே சமயத்தில் திரண்டனர். அப்போது அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த பலரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
35 ஆயிரம் பேர் கூட கூடிய இடத்தில் லட்சக்கணக்கானோர் கூடியதால் நெரிசல் ஏற்பட்டதாக கர்நாடக முதல்வர்சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற சம்பவம் ஒருபோதும் நடக்க கூடாது என்றும் அவர் கூறினார். இந்த சம்பவம் மிகபெரிய சோகம் இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக துணை முதல்வர் தெரிவித்தார். எதிர்காலத்தில் ஒரு சிறந்த தீர்வை நாங்கள் உருவாக்குவோம் என்றும் அவர் கூறினார்.