சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே ஆடு, கோழி திருடியதாக சகோதரர்கள் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய கோரி உறவினர்கள் காவலர்களின் கால்களில் விழுந்து கதறி அழுதனர்.
மதகுபட்டி அருகே அழகாமாநகரி கிராமத்தில் சுப்பு என்பவரின் தோப்பில் ஆடு, கோழியை திருடியதாக கட்டானிபட்டி கிராமத்தை சேர்ந்த சகோதரர்களான மணிகண்டன், சிவசங்கர் ஆகியோரை சிலர் கட்டிவைத்து பலமாக தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அதே கிராமத்தை சேர்ந்த 13 பேரை கைது செய்தனர். இறந்த சகோதரர்களின் உடல் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இது முன்விரோதம் காரணமாக நடந்த நிகழ்வு என்றும் திருவிழாவிற்கு சென்றவர்களை திட்டமிட்டு அழைத்து வந்து கொலை செய்திருப்பதாகவும் உறவினர்கள் குற்றம் சாட்டினர். தப்பி சென்ற மேலும் சில குற்றவாளிகளையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறியதோடு உடல்களையும் வாங்க மறுத்தனர்.
காவல்துறையினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அவர்களின் கால்களில் விழுந்து கதறிய உறவினர்கள் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி உடல்களை பெற்றுக் கொண்டனர்.