பெங்களூரு அசம்பாவிதம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு அசம்பாவிதம் குறித்து கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், சின்னசாமி மைதானம் முன்பு கூட்ட நெரிசலில் சிக்கி மக்கள் உயிரிழந்த சம்பவம் கவலை அளிப்பதாக தெரிவித்தார். வெற்றி கொண்டாட்டத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கூடுவார்கள் என்பதை எதிர்பார்க்கவில்லை என கூறிய அவர், அளவுக்கு அதிகமான கூட்டம் சேர்ந்ததே இந்த அசம்பாவிதத்திற்கு காரணமென தெரிவித்தார்.
சின்னசாமி மைதானத்தில் 35 ஆயிரம் பேர் மட்டுமே கூட முடியும் என்றும் அவர் விளக்கம் அளித்தார். கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என கூறிய அவர், காயமடைந்தவர்களுக்கான மருத்துவ சிகிச்சை தொகையை அரசே முழுவதுமாக ஏற்கும் என தெரிவித்தார்.
கூட்ட நெரிசல் சம்பவத்தை நியாயப்படுத்த விரும்பவில்லை என்றும், இது குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திகைத்த சித்தராமையா ஆவேசமடைந்து அவர்களை கடிந்து கொண்டார்.