சென்னை தாம்பரம் அருகே அடுக்குமாடிக் குடியிருப்பில் 40 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
தாம்பரம் முடிச்சூர் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி மகேஸ்வரி என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 40 சவரன் நகையை மர்மநபர் கொள்ளையடித்து சென்றார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சியின் அடிப்படையில் மர்மநபரை போலீசார் தேடிவந்தனர்.
குழந்தைக்காக சிறுக சிறுக சேர்த்த வைத்த நகையை மீட்டுத் தருமாறு தாய் மகேஸ்வரி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்ததை அடுத்து தனிப்படை அமைத்து போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.
இந்நிலையில், சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த நபரின் இருசக்கர வாகனத்தின் அடிப்படையில் விருதுநகரைச் சேர்ந்த பிரபாகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், அவரிடம் இருந்த 40 சவரன் நகையைப் பறிமுதல் செய்த போலீசார், பிரபாகரனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.