எப்ஸ்டீன் கோப்புகளில் அமெரிக்க அதிபர் டிரம்பின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.
சமீபத்தில் அமெரிக்காவில் புதிதாக கொண்டு வந்த மசோதாவில் மின்சார வாகனங்கள் கட்டாயம் இல்லை என்று அறிவிக்கப்பட்டதுடன், மின்சார வாகனங்களுக்கு அளிக்கப்பட்டு வந்த வரி சலுகையும் ரத்து செய்யப்பட்டது.
அமெரிக்க அரசின் அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே எலான் மஸ்க்கின் டெஸ்லா பங்குகள் 8 சதவீதம் வீழ்ச்சியடைந்ததால் இருவருக்கு மோதல் வெடித்தது. அமெரிக்க அதிபர் தமக்கு மிரட்டல் விடுத்துள்ளதாக குற்றம்சாட்டியிருந்த எலன் மஸ்க், எப்ஸ்டீன் கோப்புகளில் டிரம்பின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், 2019ஆம் ஆண்டு மன்ஹாட்டன் சிறையில் தற்கொலை செய்து கொண்ட பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் ஆகியோருக்கு தொடர்பு உள்ளதாகவும், நீதிமன்ற வெளியிட்டுள்ள ஆவணங்களில் டிரம்ப் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதனிடையே, தான் உதவி செய்யாவிட்டால் ட்ரம்பால் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றிருக்க முடியாது என எலான் மஸ்க் குற்றம் சாட்டியுள்ளார். டொனால்டு ட்ரம்ப் நன்றி கெட்டவர் எனவும் கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.