சென்னைக்கு ரயில் மூலம் கடத்தி வரப்பட்ட 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 700 கிராம் மெத்தபெட்டமைன் போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னை ஆர்.கே.நகர் பகுதியில் போதைப்பொருள் விற்பனை நடைபெறுவதாக நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், அந்த பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டபோது 6 பேர் கொண்ட கும்பல் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து ஒரு பெண் உட்பட 6 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 700 கிராம் மெத்தபெட்டமைன் போதைப்பொருள், ஒரு கைத்துப்பாக்கி, 15 தோட்டாக்கள், 6 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
மேலும், போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அமீனா என்ற பெண், தனது மகன் உதவியுடன் மணிப்பூரில் இருந்து போதைப்பொருளை ரயிலில் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனை அடுத்து, 6 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.