பெங்களூருவில் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவத்தில் ஆர்சிபி நிர்வாகி உட்பட 4 பேருக்கு ஜூன் 19 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ஆர்சிபி அணிக்குப் பாராட்டு விழா மற்றும் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சி பெங்களூருவில் நடைபெற்றது.
கர்நாடக அரசு சார்பில் பெங்களூரு விதான சவுதாவிலும், கர்நாடக கிரிக்கெட் சங்கம் சார்பில் சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்திலும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முதலில் விதானசவுதாவில் நடந்த விழாவில் ஆயிரக்கணக்கானோர் கூடினர்.
பின்னர், சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த பெங்களூரு அணிக்கான பாராட்டு விழாவைக் காண லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால் அங்குக் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இதில், 11 பேர் உயிரிழந்த நிலையில், 55 பேர் படுகாயமடைந்தனர். இந்நிலையில், ஆர்பிசி அணியின் மார்க்கெட்டிங் நிர்வாகி, வெற்றி கொண்டாட்டத்திற்கான நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் 3 பேர் என மொத்தம் 4 பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அவர்கள் 4 பேரையும் வரும் 19 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.