கன்னியாகுமரி அருகே வெளிநாட்டிற்குச் செல்லவிருந்த இளைஞர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை அருகே திருத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த முரளி என்பவர் வெளிநாட்டில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தார். விடுமுறை முடிந்து மீண்டும் வெளிநாட்டிற்கு செல்லவிருந்த நாளில், மனைவி மற்றும் 2 குழந்தைகளுக்குப் பிரியாணி வாங்க மார்த்தாண்டத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றார்.
பிரியாணி வாங்கிக் கொண்டு திரும்பியபோது குழித்துறை சந்திப்பு அருகே இருசக்கர வாகனத்தின் மீது கனிமவளம் ஏற்றி வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது.
இதில், முரளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் கனிமவள லாரிகளுக்கு எதிராக போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.