கரூரில் தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி முதல் முறையாக ஸ்கை லிஃப்ட் உதவியுடன் நடைபெற்றது பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியது.
கரூர் தீயணைப்புத்துறை சார்பில் புதிதாக பணிக்குச் சேர்ந்த 98 தீயணைப்பு வீரர்களுக்கு பிரத்யேக பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதில் திருப்பூர், தஞ்சை, விழுப்புரம், தூத்துக்குடி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் பங்கேற்று பயிற்சி பெற்று வருகின்றனர்.
அவர்களுக்குத் தீயணைப்பு பயிற்சி, அணி பயிற்சி, மீட்பு பயிற்சி, நவீன உபகரணங்கள் கையாளுதல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அங்குள்ள தனியார் கல்லூரி ஒன்றில் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு ஒத்திகை நடத்தினர். அப்போது சுமார் 170 அடி உயரம் கொண்ட ஸ்கை லிஃப்ட் மூலம் உயரமான கட்டடங்களில் தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்த செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இது அங்கிருந்த கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியது.